Ads

Monday, March 25, 2013

உளவு

உங்களுக்கு உளவு பார்த்த அனுபவமுண்டா, சிறுவயதில் யாரைவது உளவு பார்த்திருக்கிறீர்களா. அதற்குப்பின் மன உளைச்சலில் அவதி பட்டிருக்கிறீர்களா. இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள், இருக்கிறது என்றால் வேண்டாம், ஏனெனில் உங்கள் உணர்வுகளை கிளறிவிட்ட பாவம் வேறு வந்து சேர்ந்துவிடும் எனக்கு.

விவரம் தெரியாத வயதில் பார்த்த உளவு, விவரம் தெரிந்தபின்பு டிடெக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் பெரிய அளவில் நடத்தப்படுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். இவர்களுக்கு இது தொழில் என்றாகிவிட்டதால் குற்றவுணர்வு இல்லாமல் போய்விடுமா என்றெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வழக்கமான யோசனைகளின் அணிவகுப்பு. இப்போது இதுவா முக்கியம், நான் பார்த்த உளவு அல்லவா முக்கியம்.

ரவி ஒரு கார் மெக்கானிக் என்று அவன் வாயால் சொன்னால் கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். கிரிஸ், ஆயில் கறைகள் அப்பிய அழுக்கு பேண்ட்டை அணிந்து கொண்டு, கார் அடியில் படுத்துக்கொண்டு, டேய் அந்த ஆறாம் நம்பர் ஸ்பேனர எடுடா என்று சொல்லியபடியே, வாங்க சார் ரொம்ப நாளாச்சு நம்ம கடைப்பக்கம் வந்து என்று படுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் திரும்பி வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போதுதான் புரிந்துகொள்வீர்கள். ஏனெனில் அதன் கலரும், முக லட்சணமும் அப்படி. கார் புகை கக்கினாலும் கருப்பு படியாத சிவப்பு நிறம், சிரித்தால் குழி விழும் குண்டு முகம், அளவெடுத்த உயரம், தன்மையான பேச்சு, அலைபாயும் கண்கள் என ரவி அண்ணன் அந்த வாசலில் ஒரு அழகான கார் மெக்கானிக்.

சுமதி, அழுந்த வாரினாலும் படியாத சுருட்டை முடி, ரவிக்கு சற்றே குறைவான நிறம், மூக்குத்தியைத் தவிர பொட்டுத்தங்கம் இல்லையென்றாலும் அழகுக்கு பங்கமில்லாத களையான முகம்,அவள் வீட்டு வேலை செய்பவள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.ஏனெனில் அவளின் குடும்ப அமைப்பு அப்படி, ஒரு குக்கிராமத்தில் ஆறு பிள்ளைகளைப் பெற்ற குடிகார அப்பாவிற்கு பிறந்த இரண்டாவது மகள். சாப்பாட்டுக்கே சிக்கி சீரழியும் நிலையை காண சகியாத அவளை,பெற்றோரின் ஒப்புதலுடன் அவளின் அத்தை சென்னைக்கு அழைத்துவந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித்தந்தாள். ஏதோ அவள் வயிற்றையும், மாச சம்பளத்தில் மற்ற பிள்ளைகளின் ஒரு சில தேவைகளுக்கும் அவள் உதவியாக இருந்தாள். அப்படியே இருந்திருக்கலாம் தானே, அவளை யார் ரவியை காதலிக்க சொன்னது.

எப்படி காதலிக்காமல் இருக்கமுடியும், இருபது ஒண்டுக்குடித்தனத்தில் ரவியின் குடும்பமும் ஒன்று, சுமதி வேலைக்கு போக வரும் வழியில் தான் ரவியின் கடை. ஒரே வீடு, ஒரே வாசல், ஒரே வழி, ஒன்றே குலமில்லை, காதல் எங்கே அதெல்லாம் பார்த்துத் தொலைக்கிறது. பருவ வயது காதலாகி கசிந்துருக ஆரம்பித்தாயிற்று. இவர்களின் காதல் விவகாரமும் வெளியே கசிந்துருக ஆரம்பித்துவிட்டது, அரசல் புரசலாக அத்தையின் காதுக்கு வந்தவுடன், அய்யோ, அந்த குடிகாரனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன், ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்ன வெட்டிக்கடாசிடுவானே,இது இம்மா நாளா எங்காதுக்கு வரலியே, வந்திருந்தா அவள அன்னைக்கு மூட்ட முடிச்ச கட்டி இழுத்தும்போய் ஊர்ல உட்டுட்டு வந்துருப்பேனே, வரட்டும் அந்த ஓடுகாலி முண்ட இன்னிக்கு வூட்டுக்கு, ரெண்டுல ஒன்னு பாத்துடறேன், அம்மா வீறு கொண்டு எழுந்து அழுது புரண்டாள்.

அக்காதான், ச்சே, எவளோ சொன்னான்னு நம்ம வீட்டு பொண்ண சந்தேகப்படற, நம்ம கண்ணால பாக்கனும், அப்புறம் கேக்கனும், நீ ஏதாவது கேட்டு வெச்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆவப்போவுது. நாம் ரெண்டு நாள் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறி, பார்க்கலாம் என்ற போது என்னைப் பார்த்தது அக்கா.

புரிந்தும் புரியாமலும் நானும் அக்காவைப் பார்த்தேன், நீ என்ன பண்ற, நாளக்கி காலைல, சுமதி வேலைக்கு போவும் போது அதுக்கு தெரியாமயே பின்னாடி போற, போயி அது வழில யார் கூடவாவது நின்னு பேசுதா ந்னு சொல்ற. சரியா. நானும் உள்ளமெல்லாம் புளகாங்கிதமாய் சரி என்று வேகமாய் தலையாட்டி மனதுக்குள் அப்போதே எதிர் வீட்டு விஜியை அழைத்துக்கொண்டு உளவு பார்க்க புறப்பட்டேன்.

நான் தலையாட்டிய வேகத்தின் எதிர்வேகத்தில் குரல் வந்தது, கூட யாரையாவது கூட்டுக்கிட்டு போன அவ்ளோதான், நீ போறதும் தெரியக்கூடாது, வரதும் தெரியக்கூடாது, அங்க என்னப் பாத்தன்னு எங்ககிட்ட தான் சொல்லனும். போய் பசங்க கிட்டலாம் இதை சொல்லி வக்காத. சுர் ரென்று சுவாரஸ்யம் இறங்கினாலும் உளவின் புளகாங்கிதம் உடம்பு முழுக்க.

அடுத்தநாள் காலை, சுமதிக்கு முன்னரே நான் எழுந்துவிட்டேன், அன்றைய எனது தலையாய பணியான உளவு மேற்கொள்ளல் அப்போதே துவங்கிவிட்டது. சுமதி எழுந்தது. வெளியே இருந்து தண்ணி எடுத்து வந்து எல்லா பக்கெட், குடத்தையும் நிரப்பியது. ஒன்றிரண்டு பாத்திரத்தை விளக்கியது. குளித்தது. அதனிடமிருக்கும் மூன்று தாவணிப்பாவாடையில் ஒன்றான கத்தரிப்பூ கலர் பாவாடை தாவணியை அணிந்து கொண்டு அழுந்த அழுந்த அதன் அடங்காத தலைமுடியை வாரிக்கொண்டது. பவுடர் போட்டுக்கொண்டது, மூஞ்சி மட்டுமே தெரியக்கூடிய அந்த சாயம் போன கண்ணாடியில் ரெண்டு தடவை அதன் முகத்தை இப்படியும் அப்படியுமாய் திருப்பி திருப்பு பார்த்துக்கொண்டது. வர்ரேன் சித்தி, உள்ளேப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு, ரப்பர் செருப்பை எடுத்துப்போட்டுக்கொண்டு புறப்பட்டது.

அது வாசலை தாண்டியதுதான் தாமதம், எழுந்து வாயைக் கொப்பளித்துக்கொண்டு, ஒழுகும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓடுகிறேன். சுமதி தெருமுனை டீக்கடையைத் தாண்டியதும், நான் நடக்கவும், கொஞ்சம் ஓடவும் ஆரம்பித்தேன், தெருநாய்கள் அங்கங்கே சோம்பல் முறித்து குலைக்க ஆரம்பிக்க, ஓட்டத்தை நிறுத்திக்கொண்டேன். நாய்களைப் பார்த்து பயந்ததில் சுமதி தெரியவில்லை. அய்யயோ வுட்டுட்டோமேடா, எந்த சந்துக்கா திரும்பியிருக்கும் என்னா பண்றது என்று முக்கூட்டில் நின்று கொண்டு யோசித்துக்கொண்டே சரி பஞ்சாப் ஸ்கூல் (கில் ஆதர்ஸ் ஸ்கூல் !) வழியாவே போய்ப் பார்ப்போம் என்று விரைய, பஞ்சாப் ஸ்கூல் போய் திரும்பி பார்த்தால் சுமதி நேராக போகாமல், அதன் எதிர் சந்தில் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.

வேலை செய்ற வீட்டுக்கு ஏன் இப்புடி போவுது ? என்று நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொள்ள, அதன் பின்னாடியே போனேன். பங்களாக்கள் நிறைந்த அந்த சந்தில் ஒரு கார் அருகே சுமதி நின்று கொண்டிருந்தது, சர்.. ரென ஸ்கூட்டரில் ரவி அண்ணன். நம்ம வீட்ட தாண்டி போம் போதெல்லாம் ம்ஹூக்கும் என்று கனைக்கும் ரவி அண்ணனா அது, குனிந்த தலை நிமிராமல் போகும் வரும், அந்தப் புள்ள இருக்கறதே தெரியாதுன்னு பேர் எடுத்த ரவி அண்ணனா அது, சுமதியின் பக்கத்தில் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு நின்று பேசிக்கொண்டு இருப்பது.

இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு குறுகுறுப்பு உடலில் ஓட, அசோக மரத்தின் பின்னாடி நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன், அந்த மரமும், ரோஸ் கலர் பெயிண்ட் அடித்த அந்த வீட்டுக் காம்பவுண்டும், காரும், சுமதியின் குனிந்த தலையும், சிரிப்பு சத்தமும், ரவி அண்ணன் ஏதோ சொல்லி விட்டு வண்டியை எடுக்கும்போது, கண்டதில் உறைந்து போய் அடுத்து என்ன செய்வது என்று திகைத்திருந்த என்னைப் பார்த்துவிட்டது.

சுமதியிடம் ஏதோ சொல்ல சுமதியும் என்னைப் பார்த்தது. அவ்வளவுதான், முழு உடம்பும் வெட, வெட என்று நடுங்கியது.

இங்க வா, சுமதி கூப்பிட்டது, மிரட்சியுடனும், சிரிப்புடனும் நான் அதனருகே போனேன், இன்னம்மா, இங்க வந்திருக்க, சித்தி அனுப்புச்சா? என்று பாயிண்ட்டை பிடித்துவிட்டது, இல்ல, ல்ல, க்கோர்ட்டஸுக்கு பால் வாங்க வந்தேன், நீ போனியா, அதான் உங்கூடவே போலாம்னு....... எப்படி முடிப்பது என்று தெரியாமல், கையிலிருக்கும் பால் வாங்கும் தூக்கு என்னைவிட வேகமாய் ஆடியது என் உடம்பு போட்ட உதறலில்.
சரி பத்திரமா பால் வாங்கிட்டு வீட்டுக்குப் போ என்று போய்விட்டது. ஆனால் அதன் முகத்தில் இன்னதுதான் என்று சொல்லத்தெரியாத ஒரு கலக்கம் இருந்தது. ரவி அண்ணன் சற்று தொலைவே வண்டியை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது.

ரவியும் சுமதியும் லவ் பண்றாங்களா. பார்த்தை வீட்டில் சொல்லலாமா, வேண்டாமா, விஜி கிட்ட கேக்கலாமா என்று என உதறல் அடங்காமல் வீட்டுக்குள் நுழைந்தேன், அக்கா என்னை எதுவுமே கேட்கவில்லை, கொஞ்சம் நிம்மதியாக ஸ்கூலுக்கு கிளம்ப ஆரம்பித்தேன், மாமா எதற்கோ வெளியே போயிருக்க,அக்கா எனக்கு தலை வாரிக்கொண்டே, சுமதி என்ன பண்ணுச்சு, வேலை செய்ற வீட்டுக்கு போச்சா ? என்று கேள்விக்கணைகள். இல்லை என்று சொல்வதா, ஆமாம் என்று சொல்வதா என்று தெரியாமல் கண்ணை கட்டி வீட்டில் விட்டதுபோல உணர்ந்தேன். சொல்லு என்றது அக்கா, அது வந்து சுமதி வேலைக்குதான் போச்சு. பார்த்தேன் என்றேன். அக்கா கொஞ்சமும் நம்பவில்லை. நீ இப்ப ஸ்கூலுக்கு போ, சாயங்காலம் அம்மா வந்து உன்னை கேட்கறா மாரி கேட்கும், அப்ப சொல்லுவ என்றது. ஆனால் அம்மா கேட்கறா மாதிரியெல்லாம் கேட்கலை, வாயில் வெற்றிலைச்சாறு வடிய சிரிப்புடனே, ஏ பட்டூ, என்னத்த பாத்த என்றவுடனே கடகடவென கணக்கு பாடம் ஒப்பிக்கும் கணக்காய் ஒப்பித்துவிட்டேன்.

என் உளவுக்கூற்றினை அடிப்படையாக வைத்து 1987 லவ் ஸ்டோரி முடிவுக்கு வந்துவிட்டது. மறுநாள் சுமதி வேண்டாம் வேண்டாம் என சொல்ல, ஊர்ல திருவிழாவாண்டி, உங்கப்பன் லெட்டர் போட்டிருந்தான் என்று வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டது. வேலை செய்ற வீட்ல சொல்லனும் அத்த என்றதற்கு அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நீ கெளம்பு என்றவாறே சுமதி அழது கொண்டே கிளம்ப மனமில்லாமல் கிளம்பியதாம். நல்லவேளையாய் நான் அதைப்பார்க்கவில்லை, ஸ்கூலுக்கு போய்விட்டேன். அதற்குப்பிறகு ஒரு வாரத்திலேயே சொந்த தாய்மாமனோடு கோவிலில் கல்யாணம் என்று முடிவு செய்து அம்மா அங்கேயிருந்து அக்காவுக்கு தகவல் அனுப்ப, அக்கா மாமா சகிதம் போய் முடித்து வைத்துவிட்டு வந்தார்கள். சுமதி பயங்கர அழுகையாம், பட்டுப்புடவை கூட கட்டிக்கவில்லையாம், தலையொரு வேஷமும், துணியொரு வேஷமுமாய் தாலி கட்டிக்கொண்டதாம். அக்கா கதை கதையாய் சரசக்காவிடம் சொன்னது. ரவி ஊருக்கு போய் சுமதியைப் பார்த்தது, ஊரில் மாமா சண்டை போட்டு அதை திருப்பி அனுப்பியது என அவ்வப்போது திகிலூட்டும் கதைகள் காதில் விழுந்தது.

அதற்குப்பின்னர் ரவி அண்ணன் முகத்தைப்பார்க்கவே பிடிக்கவில்லை,சூனியம் வைத்தா மாதிரி இருந்தது. என்னை ரெண்டு அடி கூட அடிச்சிருக்கலாம் அந்த அண்ணன், ஆனா கன்னமிரண்டில் குழி விழ சிரிச்சிக்கிட்டே என் கன்னத்த செல்லமாய் கிள்ளி விட்டு வீடை காலி பண்ணிப் போய்விட்டது. அதற்குப்பிறகும் என்னை எங்கே பார்த்தாலும் சிரிக்கும், ஆனால் எனக்குதான் அந்த அண்ணனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி இல்லாமல் குற்றவாளி கணக்காய் தலை குனிந்து போகும் நிலை வாய்த்துவிட்டது.

ஒரு உளவின் கூற்றுக்கு வாழ்க்கையை பிளந்து போடும் சக்தி உண்டா ? இன்றும் இந்தக் கேள்வி சுமதியின் அடங்காத தலைமுடியினைப்போலவே என் அடிநெஞ்சில் இருக்கிறது.

No comments:

Post a Comment

ads