அமெரிக்க பிரேரணையின் சீர்திருத்தம் செய்யப்பட்ட இறுதி வடிவம் இன்று ஜெனிவாவில் சமர்ப்பிப்பு
அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணையின் சீர்திருத்தம் செய்யப்பட்ட இறுதி வடிவம் இன்றைய தினம் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையில் 25வது மனித உரிமை மாநாட்டு அமர்வின் போது, அர்ப்பணிப்புடனான பொது விவாதம் ஒன்றுக்கு அமெரிக்கா கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிககையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் ஊடாக இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு, அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் வெளிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரேரணையின் இறுதி வடிவம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர், நேற்று வியாழக்கிழமை இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துதல் தொடர்பான கூட்டம் ஒன்று ஜெனீவாவில் இடம்பெற்றது. ஜெனீவாவுக்கான அமெரிக்க தூதரகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.
இதன்போது அமெரிக்காவின் பிரேரணையில் இருந்த சில கடுமையான சொற்பதங்கள் மென்மைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ‘வலியுறுத்தல், கண்டனம் தெரிவித்தல், இலங்கை அரசாங்கத்தின் தோல்வி’ போன்ற சொற்பதங்கள், மேம்படுத்துதல், ஊக்குவித்தல் போன்ற மென்மையான சொற்பதங்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இதனை மேலும் மென்மைப்படுத்துமாறு ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் கோரி இருந்தன. எனினும் இதனை எதிர்த்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போன்ற நாடுகள், பிரேரணையை மேலும் மென்மைப்படுத்துவது, பற்களைப் பிடுங்குவது போலவும், அர்த்தமற்றதாகவும் மாறிவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கிடையில் மனித உரிமைகள் மாநாட்டில் அதிகமாக விவாதிக்கப்பட்ட விடயங்களே அர்ப்பணிக்கப்பட்ட பொது விவாதத்துக்கு சேர்க்கப்படுகின்றன. இந்த வகையில் இலங்கை விடயத்தை 25வது மனித உரிமைகள் பேரவையின் அர்ப்பணிக்கப்பட்ட பொது விவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு, இலங்கைக்கு ஆதரவான சீன, ரஷ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்த கலந்துரையாடலில் இலங்கைசார்பில் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டிருந்தாலும் அவர் எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை.
இதேவேளை இந்தியாவும் இந்த விடயத்தில் தொடர்ந்து மௌனத்தை கடைபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment